நாள் : 29.07.2015
பெறுநர்
உயர்திரு. ஆசிரியர் அவர்கள்,
ஜீனியர் விகடன்,
சென்னை.
ஐயா,
“20 வருடங்களில் 10 லட்சம் கோடி பறிபோய் இருக்கும் கார்னட் கணக்கு” என்று திரு.முகிலன் என்பவர் படத்தோடு 2.8.15 தேதிய தங்களது பத்திரிக்கையில் மா.அ.மோகன் பிரபாகரன் எழுதிய கட்டுரை தொடர்பாக இந்த மறுப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே தங்கள் பத்திரிக்கையில் கிரானைட், அடுத்து கார்னட் என்ற தலைப்பில் பகீர் கிளப்பும் மணல் வழக்கு என திரு.ஜோ.ஸ்டாலின் என்பவர் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதற்கு கடந்த 25.3.15 அன்று எங்களது மறுப்பை தெரிவித்திருந்தோம். தாங்களும் அதனை வெளியிட்டு இருந்தீர்கள்.
இந்த தாது மணல் சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணைக்கு வரும் போது அல்லது கோப்புகள் அரசு மட்டத்தில் பரிசீலிக்கப்படும் போது நீதித்துறையையும், அரசு துறையையும் எதிர்மறையாக மாற்றுவதற்காக சில ரிப்போர்ட்டர்களுக்கு கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து திரு.தயாதேவதாஸ் என்பவரால் அவ்வப்போது பொய் செய்திகள் வெளியிடப் படும். நாங்கள் ஏற்கனவே கடந்த கடிதத்திலேயே விக்டர் ராஜமாணிக்கம், சுந்தரம், அண்டன் போன்ற ஏராளமான அடியாள் பட்டாளத்தை திரு.தயாதேவதாஸ் வைத்து காசு மூலம் பொய் செய்தி பரப்புகிறார் என்பதை குறிப்பிட்டு இருந்தோம். அந்த கொள்ளை கூட்டத்தின் கூட்டணிக்கு ஆதாரமாக வீடியோவும்www.beachminerals.org என்ற இணைப்பில் உள்ளது என்பதை தெரியப்படுத்தி இருந்தோம்.
தற்போதும் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து கொண்டிருந்த நிலையில் இந்த காசுக்காக கல்வி அறிவை விற்கும் படித்த கொள்ளையர்கள் இவ்வாறு ஒரு செய்தியை சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிக்கையில் வெளியிட்டார்கள். அதற்கான ஆட்சேபணையை தெரியப்படுத்தி அதனை எங்கள் இணையதளத்திலும்www.southernmines.org வெளியிட்டு இருந்தோம். அதனையும் தாங்கள் பார்வையிட்டு கொள்ளலாம்.
இதே போல் திரு.அண்டன் என்பவர் ஒரு பொது நல வழக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விட்டு உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கைகளில் இலவசமாக செய்தி வர வைத்தார். தயாதேவதாஸ்க்கும், அண்டனுக்கும் உள்ள தொடர்பு வீடியோவில் பதிவு செய்து www.beachminerals.org இணையதளத்தில் வெளியிடப் பட்டதால் இறுதியில் அண்டன் அந்த வழக்கை வாபஸ் பெற்று சென்றார். இதனை பத்திரிக்கைகளில் வெளியிடவில்லை. மேலும் திரு.அண்டன் இந்த பொது நல வழக்கு தாக்கல் செய்வதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தது தயாதேவதாஸ் தான் என்பதையும் திரு.முகிலன் என்பவரும் திரு.தயாதேவதாசிடம் பணம் வாங்கி கொண்டு தான் இம்மாதிரியான பேட்டிகளையும், அறிவிப்புகளையும், போராட்டங்களையும் செய்து வருகிறார் என்பதையும், மற்றும் ஏராளமான விசயங்களை ஒரு தொலைகாட்சி பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார். மேற்கண்ட வீடியோ தென்மண்டல கட்டுமர நாட்டு படகு மீனவர் சங்க தலைவர் திரு.ராஜா என்பவரிடம் உள்ளது. தாங்கள் அதனை பரிசீலித்துக் கொள்ளலாம்.
எனவே முகிலனின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டம் என்பது காசுக்காக ஆடும் கரகாட்டகாரரின் செயல் போன்றது. இவர் 39 லட்சம் டன் சட்டவிரோதமாக குவாரி செய்து இதனால் அரசு நடவடிக்கை எடுத்து தொழிலை முடக்கி வைத்துள்ள திரு.தயாதேவதாஸ்க்கு ஆதரவாக இந்த செய்தியை வெளியிட்டு உள்ளார். இதுவும் நீதித்துறையையும், அரசு துறையையும் எதிர் மறையான முடிவு எடுப்பதற்கான ஒரு ஏற்பாடு.
தங்களது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கணக்குகள் மற்றும் தொகைகள் அனைத்தும் தவறானவை.
திரு.ஆஷிஷ்குமார் என்பவர் தயாதேவதாசிடம் பணியாற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுந்தரம் என்பவரின் தூண்டுதலால் தான் இவ்வாறு பொய்யான அறிக்கை கொடுத்தார் என்பதை திரு.சுந்தரம் சொல்வதே வீடியோவில் உள்ளது. திரு.ஆஷிஷ்குமார் மீது குற்ற வழக்கு தொடர அனுமதி கேட்டு ஒரு சுரங்க குத்தகை உரிமையாளர் மனு கொடுத்தது ஆதாரங்களுடன் www.beachminerals.org இணைய தளத்தில் உள்ளது. அரசும் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் அதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
78 குவாரிகளில் 64 குவாரிகள் ஒரு தனி மனிதருக்கு சொந்தம் என கூறி இருப்பது உண்மையல்ல. பல்வேறு நிறுவனங்கள் குவாரிகளை வைத்துள்ளன. இந்த 64 குவாரிகளில் 58 குவாரிகளில் குத்தகைதாரர்களில் சொந்த பட்டா நிலத்தில் பெறப்பட்டவை. அரசு நிலத்தில் பெறப்பட்ட குவாரிகள் மொத்தம் 6 தான். அதே நேரத்தில் தயாதேவதாஸ் பெற்றுள்ள 8 குவாரிகளும் அரசு நிலத்தில் தான்.
அதே போல் ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் 2450 ஏக்கர் சுரங்க குத்தகை வைத்துக் கொள்ளலாம் என்பது சட்டம் அனுமதித்திருக்கும் அளவு. இதனை விட கூடுதலாக வைத்திருக்கிறார்கள் என இவர் நிரூபிப்பாரா?
அதே போல் இவர் குறிப்பிட்டு இருக்கும் விலை, ஏற்றுமதி தொகை மற்றும் வருவாய் இழப்பு என கூறி இருப்பது அனைத்துமே தவறானது. உண்மைக்கு மாறானது. கடந்த 25 வருடங்களில் இந்தியா முழுவதும் இருந்து அரசு நிறுவனங்கள், தனியார்கள் ஆகிய அனைவரும் ஏற்றுமதி செய்த தாது மணலின் மதிப்பே 20000 கோடி ரூபாய் தான். இதனை இந்திய அரசின் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் அலுவலக இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இது ஒரு தனி நபர் தொழில் அல்ல. இந்த தொழிலை நம்பி பல்லாயிரகணக்கான தொழிலாளர் குடும்பத்தினர் உள்ளார்கள். இதில் மீனவ சமுதாயத்தினரும் அடங்கும். திரு.முகிலன் என்னும் காசுக்காக பேசும் நபருக்கு இதை பற்றி எல்லாம் கவலை இல்லாமல் இருக்கலாம்.
தயாதேவதாசிடம் பணியாற்றும் முகிலன் தான் வாங்கிய காசுக்காக இவ்வாறு பொய்யான செய்தியை கூறினால் பெயர் பெற்ற தங்கள் பத்திரிக்கையும் இதனை பரிசீலிக்காமல் வெளியிடுவது நியாயம் தானா?
அரசும் ஏற்கனவே ஏராளமான குவாரிகளை வைத்துள்ளது. ஆனால் அவர்களால் தரமாக உற்பத்தி செய்ய முடியாததால் தனியாரை விட விலை குறைத்து விற்கிறார்கள்.
அரசு நடத்தும் தொழில்கள் எவ்வாறு நடக்கிறது என்பதை தாங்கள் டாமின் நடத்தும் கிரானைட் மற்றும் பொது பணித்துறை நடத்தும் ஆற்று மணல் குவாரி ஆகியவற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம். கடந்த 10 வருடங்களில் அவர்களது விற்பனை, ஏற்றுமதி, உற்பத்தி போன்ற விபரங்களை பெற்று பரிசீலித்தால் தெரியும்.
எங்களது ஐயம் இந்த செய்தியாளர் திரு.முகிலனோடு சேர்ந்து தவறுக்கு துணை போகிறாரா அல்லது முகிலனால் ஏமாற்றப்பட்டாரா என்பது தான்.
தயவு செய்து எங்களது இந்த மறுப்பை தங்கள் பத்திரிக்கையில் வெளியிடுங்கள்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
ஆர். பாலகிருஷ்ணன்